"ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு உட்பட மலையக மக்களின் பிரச்சினைகளை உள்ளடக்கி ஆறுமுகம் தொண்டமான் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றும்."
- இவ்வாறு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறுதி அஞ்சலி நிகழ்வில் இன்று இரங்கல் உரை ஆற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அங்கு பிரதமர் மேலும் தெரிவித்ததாவது:-
"அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இழப்பை எண்ணி நான் வருந்துகின்றேன். அது எனக்கும் அரசுக்கும் பேரிழப்பு. இறுதியாக என்னைச் சந்தித்து அவர் தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு குறித்து என்னிடம் பேசினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் குறித்தும் என்னிடம் பேசினார். அவர் என்னைச் சந்தித்துவிட்டு போகின்றேன் என்று சொன்னாரா அல்லது போய்வருகிறேன் என்று சொன்னாரா என்று நினைவில்லாமல் இருக்கின்றது.
அவர் கேட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நான் அமைச்சரவையில் மறுநாள் முன்வைத்தேன். அரசு அதனை நிறைவேற்றும். அதேபோல் மறுநாள் இந்தியப் பிரதமர் என்னுடன் தொலைபேசியில் பேசி ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்காகத் தனது ஆறுதலைத் தெரிவித்தார். அதை மக்களிடம் கூறுமாறு சொன்னார். பல தலைவர்கள் அனுதாபங்களைத் தெரிவித்தனர்.
அரசியலில் தொண்டமான்கள் குறுகிய எண்ணங்களைக் கொண்டிருக்கவில்லை. தோட்ட அபிவிருத்தி குறித்தே அவர்கள் எப்போதும் பேசினார்கள். 1949ஆம் ஆண்டு முல்லோயா கோவிந்தன் செய்த போராட்டத்தைவிட இன்றுள்ள மலையக இளைஞர்கள் புதிய அணுகுமுறையில் போராடுகின்றனர். அவர்கள் நடத்திய ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு போராட்டம் அப்படியானது.
தொண்டமான் தமது பகுதி விகாரைகளை அகற்ற எப்போதும் கோரியதில்லை. அதற்காக மக்களைத் தூண்டியதில்லை. இருக்கும் விகாரைகளை அபிவிருத்தி செய்தார். அப்படியான கொள்கைகளால்தான் இலங்கை மக்களின் மனதில் அவர் இன்றும் நிற்கின்றார்" - என்றார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுப்பிவைத்த இரங்கல் உரையும் இங்கு வாசிக்கப்பட்டது.